பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைத் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.
மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ்சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதைஎப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுரும்இப்படியீற் றுத்தியிலை யை
மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும் என துத்தியைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நாம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலசிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.
இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்ப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.
நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரனத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்திகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகிறது.
துத்தி இலை குடல் புண்களை ஆற்றி மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துக் சாப்பிடலாம்.
துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.
ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். சமயம் துதிதிக் கீரை ஒரு கைபிடி எடுத்து அதை 100 மி.லி நீரில் கொதிக்க வைத்துச் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும்.
துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.
அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுத்தல், சிறுநீரில் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி நீரில் கொதிக்கவைத்துப் பருகலாம்.
வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு ‘அதிபலா’ என்ற வேறு பெயரும் உண்டு.
இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் வலி நீக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பல சித்த மருந்துகளில் துத்தி சேர்க்கபடுகிறது.
வட மாநிலத்தில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்கள் துத்தி இலையின் பொடியை கோதுமை மாவுடன் கலந்து ரொட்டியாகத் தயாரித்துச் சாப்பிடுகின்றனர். கருப்பை சார்ந்த நோய்கள் தீர இவ்வாறு தயாரித்துச் சாப்பிடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.
பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணம் தெரியும்.
மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் விடுதலை அடையலாம்.
Comments
Post a Comment